புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் ஊராட்சியில் தனிநபர் கழிப்பறை கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி அப்பகுதியினர் பிரதமருக்கு புகார் மனு அளித்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் ஊராட்சியில், மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தின் மூலம் 330 பயனாளிகள் தனிநபர் கழிப்பறை கட்டுவதற்கான நிதி பெறத் தேர்வு செய்யப்பட்டனர். அதில் பயனாளிக்கு தலா ரூ.12 ஆயிரம் என முதல்கட்டமாக 136 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களிடம் கழிப்பறைக்கான நிதி, உபகரணங்கள் வழங்குவதற்குப் பதிலாக, அனைத்து கழிப்பறைகளையும் கட்ட தனிநபருக்கு முறைகேடாக ஒப்பந்தம் வழங்கப்பட்டதாம்.
ஒப்பந்தம் பெற்றவர் பயனாளிகளிடம் கூடுதல் தொகை வசூலித்ததோடு, பணம் தர மறுத்தவர்களுக்கு வழங்கப்பட்ட பொருட்களையும் எடுத்துச் சென்றாராம். இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதையடுத்து, பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட பயனாளிகள் கொத்தமங்கலம் தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, தபால் நிலையத்தில் இருந்து முறைகேடு குறித்து பிரதமருக்கு புகார் மனுக்களையும் அனுப்பினர்.