புதுக்கோட்டை அருகே உள்ள ரெங்கம்மாள் சத்திரம் நரிக்குறவர் காலனியில் சனிக்கிழமை நடைபெற்ற மருத்துவ முகாமில் 150 பேருக்கு சிகிச்சை, ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
சாலை விபத்து தடுப்பு,மீட்புச் சங்கம், எஸ்.கே. மருத்துவமனை, சிவாஜி சமூக நலப் பேரவை ஆகியன இணைந்து காலை 10 மணி முதல் 1 மணி வரை இலவசப் பொது மருத்துவ முகாமுக்கு சாலை விபத்து தடுப்பு, மீட்பு சங்கத் தலைவர் மாருதி க. மோகன்ராஜ் தலைமை வகித்தார்.
அரசு மருத்துவர் ஆறுமுகம், மகப்பேறு மருத்துவர் மாலதி ஆகியோர் பங்கேற்று ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட 150 பேருக்கு பரிசோதனை செய்து ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த சோகை போன்ற நோய்களுக்கு மருந்து, மாத்திரை அளித்து ஆலோசனை வழங்கினார்.
ஏற்பாடுகளை, சிவாஜி சமூகநலப் பேரவைத் தலைவர் சுப்பையா, மருத்துவமனை மேலாளர் நாகராஜன், சாலை விபத்து தடுப்பு, மீட்பு சங்க நிர்வாகி அ.லெ. சொக்கலிங்கம், தொண்டு நிறுவன இயக்குநர், மருத்துவர் பழனிசாமி, ரோட்டரி பிளாசம் மாவட்ட அனுசரணையாளர் ஜெயமதி ஆகியோர் செய்தனர். செயலர் சேது கார்த்திகேயன் நன்றி கூறினார்.