புதுக்கோட்டை அரசு ராணியார் மருத்துவமனையில் பிரசவித்த பெண் மர்மக்காய்ச்சலால் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா, சிவபுரம் இளங்குடிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் மனைவி சத்யா (24). நிறைமாதக் கர்ப்பிணியான இவர் கடந்த 7-ஆம் தேதி புதுக்கோட்டையில் உள்ள அரசு ராணியார் மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவைச் சிகிச்சை மூலம் அதே நாளில் பெண் குழந்தை பிறந்தது. இதைத் தொடர்ந்து சத்யா அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந் நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சத்யாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அவர் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து சத்யாவின் உறவினர்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க தாய் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறி கதறியழுதது அங்கிருந்த அனைவரையும் வேதனைக்கு உள்ளாக்கியது.