பொன்னமராவதியில் முழு சுகாதாரத் திட்ட விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முழு சுகாதார இயக்கத் திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி முகமை மூலம் கடந்த 9-ம் தேதியிலிருந்து 15-ம் தேதி வரை திறந்தவெளியில் மலம் கழித்தல் நிலையிலிருந்து விடுதலை வாரம் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி பொன்னமராவதியில் நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியை வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ். மதியழகன் தொடங்கி வைத்தார்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொடங்கிய பேரணி அண்ணாசாலை, பேருந்து நிலையம், புதுப்பட்டி வழியாகச் சென்று காந்தி சிலை அருகே நிறைவுற்றது. பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் சுகாதார விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி, முழக்கமிட்டுச் சென்றனர்.
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கராஜ், வெங்கடேசன், பஞ்சநாதன், பாலசுப்பிரமணியன், வலையபட்டி சிதம்பரம் மெட்ரிக், அமல அன்னை மெட்ரிக், புதுப்பட்டி மகளிர் மேல்நிலை, அரிமா மெட்ரிக் மேல்நிலை, வலம்புரி வடுகநாதன் மேல்நிலை பள்ளிகளின் மாணவ, மாணவிகள் சிதம்பரம் மெட்ரிக் பள்ளி முதல்வர் வே. முருகேசன், நிர்வாக மேலாளர் நெ. ராமச்சந்திரன், ஆசிரியர்கள் விஜயலெட்சுமி, சலோ, பிரகாஷ் ஆகியோர் பங்கேற்றனர்.