பார்வையற்ற குழந்தைகளை அரசின் பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளியில் சேர்த்து இலவசக் கல்வி உள்ளிட்டவற்றைப் பெற்று பயன்பெற வேண்டும் ஆட்சியர் சு.கணேஷ்.
புதுக்கோட்டை நகர்மன்றத்தில் பார்வையற்றோர் சங்கத்தின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முப்பெறும் விழாவில் பங்கேற்று ஆட்சியர் சு.கணேஷ் பேசியது: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் மாதந்திர உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அவர்கள் சொந்தத் தொழில் செய்து முன்னேறும் வகையில், மகளிர் திட்டம் சார்பில் சுய உதவிக்குழு அமைத்து சுழல் நிதி வழங்கப்படுகிறது. புதுகை மாவட்டத்தில் பார்வையற்ற 23 மாற்றுத்திறனாளிகளுக்கு பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மேலும், குடிசை மாற்றுவாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்தால் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கண் பார்வையற்ற குழந்தைகளை அரசு நடத்தும் பார்வையற்றோர் பள்ளியில் அவர்களது பெற்றோர் சேர்க்க வேண்டும்.
அங்கு, அவர்களுக்கு ஆரம்பக் கல்வி முதல் கல்லூரி படிப்பு வரை அரசு இலவசமாக வழங்கி வருகிறது. மேலும், அவர்களுக்கு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.விழாவில், பார்வையற்றோர் சங்க சட்ட ஆலோசகர் பாலசுந்தரம், பார்வையற்றோர் மறுமலர்ச்சி சங்கத் தலைவர் திருஞானம், பொதுச்செயலர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.