விவசாயிகள் வாங்கும் ஒரு கிலோ விதை உளுந்துக்கு ரூ.25 மானியம் வழங்கப்படும் என புதுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் செல்வி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை வட்டத்தில் தற்போது உளுந்து சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் நிலத்தை தயார் செய்து வருகின்றனர்.
பயறு வகைகளுக்கு குறைந்த அளவு நீரே போதுமானது. இதனால் குறைந்த நீரை வைத்து அதிக பரப்பில் சாகுபடி செய்யலாம். உளுந்து பயிரில் வேர்களில் வேர் முடிச்சு இருப்பதால் காற்றில் உள்ள
தழைச்சத்து கிரகிக்கப்பட்டு மண்வளம் மேம்படுத்தப்படுகிறது. நெல் வரப்பின் ஓரத்தில் வரப்பு பயிராக சாகுபடி செய்வதனால் நெற்பயிரில் உருவாகும் பூச்சிகள் கட்டுப்படுத்தப்படுகிறது.
நிலக்கடலை, கரும்பு ஆகிய பயிர்களில் ஊடு பயிராகவும் சாகுபடி செய்து உபரி வருவாய் பெற்றிடலாம். தற்போது தேவையான சான்று பெற்ற வம்பன்& 6 உளுந்து விதைகள் புதுக்கோட்டை வட்டத்தில்
புதுக்கோட்டை, ஆதனக்கோட்டை, புத்தாம்பூர் வேளாண்மை கிடங்குகளில் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.
இந்த வம்பன்&6 ரகம் மஞ்சள் தேமல் நோய் எதிர்ப்பு திறன் உடையது. தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டத்தின் (பயறு) கீழ் ஒரு கிலோ உளுந்து விதைக்கு ரூ.25 மானியம் வழங்கப்படுகிறது. எனவே
விவசாயிகள் உளுந்து சாகுபடி செய்து பயன்பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.