புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே ரயில்வே தரைப்பாலம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் புதன்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி-ராமேசுவரம் ரயில் வழித்தடத்தில் கீரனூர் அருகேயுள்ள களமாவூர், சீத்தப்பட்டி கிராமங்களிடையே ஆளில்லா ரயில்வே கேட் உள்ளது. மக்களின் பாதுகாப்பு கருதி, ரயில்வே நிர்வாகம்
அப்பகுதியில் உள்ள ஆளில்லா கேட்டை மூடிவிட்டு, தரைப்பாலம் அமைக்க முடிவு செய்து, அதற்கான பணிகளை புதன்கிழமை தொடங்கியது.
இதுகுறித்து தகவலறிந்த களமாவூர், சீத்தப்பட்டி கிராம மக்கள், தரைப்பாலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, ரயில்வே அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்துக்கு வந்த கீரனூர் வட்டாட்சியர் கலைமணி, ரயில்வே கோட்டப் பொறியாளர் ராஜேந்திரன், கீரனூர் போலீஸார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தாழ்வாக இருக்கும் அப்பகுதியில் தரைப்பாலம் அமைத்தால், மழைகாலங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு தடை ஏற்படும்.
மேலும், இரு கிராமங்களுக்கும் கதிர்அறுவடை இயந்திரங்கள், கனரக வாகனங்கள் செல்ல முடியாது. தரைப்பாலத்தால் கிராம மக்களுக்கு பல்வேறு வகையிலும் பெரும் பாதிப்பு ஏற்படும் என
அதிகாரிகளுடன் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, தரைப்பாலம் அமைக்கும் பணி தாற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால், போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.