புதுக்கோட்டையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 6 லட்சம் மோசடி செய்ததாக 3 பேர் மீது குற்றப்பிரிவு போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிந்தனர்.
புதுக்கோட்டை அருகேயுள்ள திருவப்பூரைச் சேர்ந்தவர் வி. பழனிவேல். 3 ஆண்டுகளுக்கு முன் டிஎன்பிஎஸ்சி மூலம் விஏஓ வேலை வாங்கித் தருவதாகக் கூறி திருவப்பூரைச் சேர்ந்த வி. சுந்தர்ராஜன், பழனியப்பா நகரைச் சேர்ந்த ஆர். வெள்ளைச்சாமி, கிள்ளுக்கோட்டையைச் சேர்ந்த பாண்டிசெல்வம் ஆகியோர் பழனிவேலுவிடமிருந்து ரூ. 6 லட்சத்தை பல தவணைகளாக வாங்கினராம். ஆனால், வேலை வாங்கிக் கொடுக்கவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லையாம்.
இதுகுறித்த புகாரின்பேரில் மூவர் மீதும் புதுக்கோட்டை மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர். இதேபோல, புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியில் ஒரு பெண்ணுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் பணி வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 18.50 லட்சம் மோசடி செய்த வழக்கில் சுந்தர்ராஜன், வெள்ளைச்சாமி ஆகிய இருவரையும் கடந்த அக்டோபர் மாதம் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.