அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதைப்போல நியாயமான விலையில் மணல் கிடைக்கும் வகையில் அரசே மணல் கிடங்குகளைத் தொடங்க வேண்டுமென கல்லுடைக்கும் தொழிலாளர்கள் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டையில் கல்லுடைக்கும், கட்டுமானத் தொழிலாளர்கள் சங்க உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் (சிஐடியு) மாவட்ட பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்டப் பொருளாளர் சி. மாரிக்கண்ணு தலைமை வகித்தார். மாநில செயலர் கே. பிரபாகரன், மாநில துணைத் தலைவர் எம். மகாலெட்சுமி, மாவட்டத் தலைவர் எம். வீரையன் உள்ளிட்டோர் பேசினர். சி. மாரிக்கண்ணு, பொ. வெள்ளையம்மாள் உள்ளிட்ட 11 பேரை உள்ளடக்கி கட்டுமானத் தொழிலாளர் பெண்கள் அமைப்புக் குழு உருவாக்கப்பட்டது. பின்னர், இந்த அமைப்பின் சார்பில் மாவட்டப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது.
பணித் தளங்களில் பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். பாலியல் தொல்லைகளைத் தடுக்கும் வகையில் கண்காணிப்புக் குழு ஏற்படுத்த வேண்டும்.
தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ. 4 ஆயிரம் வழங்க வேண்டும்.
ஏழைகள் பயனடையும் வகையில் மணல் கிடங்கு அமைக்க வேண்டும். மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட அலுவலரை உடனே நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.