அன்னவாசல் அருகே வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில் விவசாயிக்கு வெட்டு விழுந்தது.
அன்னவாசல் அருகேயுள்ள சண்டப்பட்டியை சேர்ந்தவர் சோலைமலை (60). இவருக்கும் இவரது உறவினர்களுக்கும் சொந்தமான விவசாய நிலங்களில் உள்ள கிணற்றில் ஆளுக்கொருநாள் முறைவைத்து தண்ணீர் பாய்ச்சுவது வழக்கம். இந்நிலையில் புதன்கிழமை தண்ணீர் பாய்ச்சுவதில் இரு தரப்பினருக்கும் பிரச்னை ஏற்பட்டது. இதில் சோலைமலையை உறவினர்களான உழகப்பன் மகன் குமார், குமார் மனைவி ஆனந்தி, கோசன் மகன் சுப்ரமணியன், உழகப்பன் மனைவி வெள்ளையம்மாள், முத்து மனைவி கண்ணகி ஆகிய 5 பேரும் சேர்ந்து அரிவாள், கட்டையால் தாக்கினர். இதில் படுகாயமடைந்த சோலைமலையை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து அன்னவாசல் காவல் ஆய்வாளர் சுமதி வழக்குப்பதிந்து ஆனந்தி, வெள்ளையம்மாள், கண்ணகியை கைது செய்தார். தலைமறைவான குமார்,சுப்பிரமணியை தேடிவருகிறார்.