பாரம்பரியமிக்க புதுக்கோட்டை அரண்மனையை சுற்றுலாத் தலமாகவும், வரலாற்றுச் சின்னமாகவும் அறிவிக்க வேண்டுமென சுற்றுலா ஆர்வலர்களும், வரலாற்று ஆய்வாளர்களும் எதிர்பார்க்கின்றனர்.
புதுக்கோட்டை சமஸ்தான மன்னர் மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான் ஆட்சிக்காலத்தில் 24.2.1913-ல் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள வனப்பகுதிக்கு நடுவில் இப்புதிய அரண்மனைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இதையடுத்து மன்னராக இருந்த ராஜா ராஜகோபாலத்தொண்டைமான் ஆட்சிக்காலத்தில் 14.9.1929-ல் வெண்மை மற்றும் கருப்புநிற பளிங்கு கற்களால் கட்டப்பட்ட இப்புதிய அரண்மனை திறக்கப்பட்டது. சுதந்திரம் பெற்ற ஓராண்டுக்குப் பின்னர், இந்தியாவுடன் புதுக்கோட்டை சமஸ்தானம் இணைக்கப்பட்டது.
திருச்சி மாவட்டத்தின் ஒரு கோட்டமாக இருந்து வந்த புதுக்கோட்டை 1974-ல் தனி மாவட்டமாக உதயமானது. அப்போதைய அரசு அரண்மனையை மன்னரிடமிருந்து பெற்று அரண்மனையில் சில அறைகளைத் தடுத்து, மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வந்தது. இந்நிலையில்,பாரம்பரிய வரலாற்று சின்னம் பழமை மாறாமல் இருக்க வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள்,வரலாற்று ஆய்வாளர்கள் எடுத்த முயற்சியின் பலனாக இந்த அரண்மனையின் பின்புறம் புதிய கட்டடம் கட்டப்பட்டு அதில் தற்போது ஆட்சியரகம் இயங்கி வருகிறது. இருப்பினும் சுற்றுலாத் துறை, டிஆர்ஓ, நீதியியல் துறை உள்ளிட்ட துறைகள் இன்னமும் அரண்மனையில் இயங்கி வருவதை இடமாற்றம் செய்து சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும் என்பதே வரலாற்று ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.