புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் உள்ள சோழர் காலத்தில் கட்டப்பட்ட அருள்மிகு அரங்குளநாதர் உடனுறை பெரியநாயகி அம்பாள் கோயில் ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள் கிழமை தொடங்கியது.
இதைமுன்னிட்டு காலை 8 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பிறகு அம்பாள் சன்னதியில் உள்ள 51 அடி உயரமுள்ள வெண்கல கொடி மரத்திற்கு சிவாச்சாரியார்கள் தீபாராதனை காண்பித்து மேளதாளத்துடன் கொடி ஏற்றிவைத்தனர். இதையடுத்து அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளச்செய்து தேரோடும் 4 வீதிகளிலும் வீதியுலா நடைபெற்றது.
தொடர்ந்து தினசரி அம்பாள் காமதேனு வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வாக 25.7.2017 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது. அன்று இரவு சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடைபெறும். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம், மண்டகப்படிதாரர்கள், விழாக்குழுவினர், வட்டார பொதுமக்கள் செய்து வருகின்றனர்.