புதுக்கோட்டை அருகே குடிநீர்த் தட்டுப்பாட்டைக் கண்டித்து பொதுமக்கள் திருவப்பூர் ரயில்வே கேட் அருகே காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் திங்கள்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், கவிநாடு மேற்கு ஊராட்சிக்குள்பட்ட பெருமாள்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 2 மாத காலமாக குடிநீர் முறையாக விநியோகிக்கப்படவில்லையாம். குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல முறை ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால், அதிருப்தியடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் திருவப்பூர் ரயில்வே கேட் பகுதியில் தண்டவாளம் அருகே அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீஸார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் சாலை மறியல் கைவிடப்பட்டது. ரயில்வே தண்டவாளம் அருகே அமர்ந்து சாலை மறியல் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது .