மாவட்டத்தில் சத்துணவுத் திட்டத்தில் காலியாகவுள்ள 50% பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழக சத்துணவு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் மாவட்டத் தலைவர் கே. சுப்பிரமணியன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற அச்சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், வரும் 7 ஆவது ஊதியக்குழு பரிந்துரையில் சத்துணவு ஊழியர்களை சிறப்பினமாக எடுத்துக்கொண்டு வரையறுக்கப்பட்ட ஊதியமும், ரூ. 5 ஆயிரம் ஓய்வூதியமும் வழங்க வேண்டும். மாவட்டம் முழுவதும் பாதிக்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், சத்துணவு மையத்தை நடத்துவதில் சிரமம் உள்ளது. கடந்த பிப்ரவரி 2017 -ல் நேர்முகத் தேர்வு நடைபெற்றும், இதுவரை காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படவில்லை. அவற்றை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ். மதியழகன் வேலை அறிக்கை வாசித்தார். மாவட்ட கெளரவத் தலைவர் அழ. முத்து, மாநிலப் பொருளாளர் அம்பிகாபதி உள்ளிட்டோர் பேசினர்.