பொன்னமராவதி வட்டாரத்தில் நடைபெற்றுவரும் வேளாண் பணிகளை புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ராஜகோபால் மற்றும் துணை இயக்குநர் சேட் முகமது ஆகியோர் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.
தொடக்கமாக, நல்லூர் கிராமத்தில் நடைபெற்றுவரும் கோடை உழவுப் பணியை வேளாண்மை இணை இயக்குநர் ராஜகோபால் ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு கோடை உழவின் பயன்கள் மற்றும் அதனால் மண்ணில் நிகழும் மாற்றங்கள் குறித்து விளக்கினார். அரசமலையில் இயங்கிவரும் தானியங்கி வானிலை மையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, பொன்னமராவதி வட்டார வேளாண்மை விரிவாக்க மைய கிடங்கில் இருப்பு விவரங்களை ஆய்வு செய்து, நபார்டு வங்கி நிதி உதவியுடன் கட்டப்பட்டு வரும் வேளாண்மை விரிவாக்க மையத்தின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, வேளாண்மை உதவி இயக்குநர் எட்வர்ட் சிங், வேளாண்மை அலுவலர் கவிதா, துணை வேளாண்மை அலுவலர் முருகன், உதவி வேளாண்மை அலுவலர்கள் மலர்விழி, அருளானந்தம், சதீஷ், அட்மா திட்ட மேலாளர் தேவி, உதவி மேலாளர் பிரியங்கா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.