பொன்னமராவதி காந்தி சிலையிலிருந்து வேகுப்பட்டி வழியாக பூலாங்குறிச்சி செல்லும் சேதமடைந்த சாலையை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இச்சாலையின் வழியே புதுக்கோட்டை, திருப்பத்தூர், திருமயம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
பூலாங்குறிச்சி வ.செ.சிவ அரசு கல்லூரி, புகழ்பெற்ற கோயில்களான காஞ்சாத்துமலை முருகன் கோயில், வேகுப்பட்டி விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயில், பெருமாள் கோயில், ஏனமாரியம்மன் கோயில் உள்ளிட்ட இடங்களுக்கு இச்சாலை வழியாகத்தான் செல்லவேண்டும். வேகுப்பட்டி, காட்டுப்பட்டி, உசிலம்பட்டி, பூலாங்குறிச்சி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சாலை சேதமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சாலை சேதமடைந்து காணப்படுவதால் இச்சாலையின் வழியே இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் முறையாக இயக்கப்படுவதில்லை. இச்சாலையை சீரமைக்க வேகுப்பட்டி மற்றும் சுற்றுப்பகுதி மக்கள் நீண்ட நாள்களாகப் போராடி வருகின்றனர். எனினும், சாலையை சீரமைக்க இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.