புதுகை மாவட்டத்தில் விதிகளை மீறி இயங்கி வந்த கேபிள் டிவி கட்டுப்பாட்டு அறைகளுக்கு சீல் வைத்து மாவட்ட நிர்வாகம் புதன்கிழமை நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் பதிவு பெற்ற உள்ளுர் கேபிள் ஆபரேட்டர்கள் புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி மற்றும் ஆவுடையார்கோவில் தாலுகாக்களில் அரசு சிக்னல் எடுத்து ஒளிபரப்பாமல், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திடம் முறையாக அனுமதி பெறாமல் அரசு விதிமுறைகளை மீறி சட்ட விரோதமாக கேபிள் டிவி கட்டுப்பாட்டு அறை அமைத்து கேபிள்டிவி ஒளிபரப்பு செய்து வந்ததால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆட்சியர் சு.கணேஷ் உத்தரவுப்படி புதன்கிழமை (21.06.2017) அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் ஏ.சரவணன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்படி, கட்டுமாவடியில் சரவணன், கோட்டைப்பட்டிணத்தில் முகமதுமரைக்காயர், மணமேல்குடி பெத்தையன்குடியிருப்பு ஜகுபர்சாதிக், மீமிசல் செ. ராமச்சந்திரன் ஆகியோர் அரசு அனுமதி இல்லாமல் நடத்தி வந்த கேபிள் கட்டுப்பாட்டு அறைகள் மூடி சீல் வைக்கப்பட்டன.
இதில், மணமேல்குடி வட்டாட்சியர் சாமிநாதன், ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் பவானி, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தனி வட்டாட்சியர் க.தமிழ்மணி, காவல்துறை ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.