உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து புதுகை நகராட்சி சந்தில் இருந்து வந்த நெடுநாள் ஆக்கிரமிப்பு புதன்கிழமை அகற்றப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தின் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் நகராட்சிப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என புதுகையைச் சேர்ந்தவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடுத்த பொதுநல வழக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, கிழக்கு ராஜவீதி உள்பட சில வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆனால், நகரின் முக்கிய பகுதியான அண்ணா சிலை, மார்த்தாண்டபுரம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் ஆட்சியர், ஆணையர், தேசிய, மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அனைவரும் கடந்த வாரம் நீதிமன்றம் முன்பு ஆஜராகினர். அப்போது, வரும் ஜூன் 25 -ஆம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அது தொடர்பான ஆவணங்களை ஜூன் 28 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, தஞ்சை, காரைக்குடி, திருச்சி தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், நகராட்சிப் பகுதிகளில் சாலையின் இரு புறமும் பல ஆண்டுகளாக இருந்த வீடுகள், சுவர்கள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன. மேலும், புதுகை மார்த்தாண்டபுரம் பகுதியில் பல ஆண்டு கால ஆக்கிரமிப்புகளும் புதன்கிழமை காலை அப்புறப்படுத்தப்பட்டது. இதையொட்டி பேராங்குளம், பழைய பேருந்து நிலையம் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.