பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.27.12 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளை செவ்வாய்க்கிழமை ஆட்சியர் சு.கணேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
புதுகை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை ஆட்சியர் சு.கணேஷ் நேரில் பார்வையிட்டார்.
பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், நெருஞ்சிக்குடி ஊராட்சி, கூடுதலைப்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 2 தடுப்பணைகள் கட்டும் பணி, சேரனூர் ஊராட்சி, காரணாப்பட்டியில் உள்ள குடும்பங்களுக்கு மரக்கன்றுகள் வழங்குவது,கொன்னையம்பட்டி ஊராட்சி, இடையன் கண்மாயில் ரூ.24.12 லட்சம் மதிப்பீட்டில் 3,000 நாட்டு கருவேல மரங்கள் நடும் பணி என மொத்தம் 27.12 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை ஆட்சியர் சு. கணேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சந்தோஷ் குமார்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் து.பாஸ்கர், வை.சதாசிவம், மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.