அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளுக்கு தீவிர ஆய்வுக்குப் பிறகே அனுமதி: ஆட்சியர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை அரசு வகுத்துள்ள விதிமுறைகளின் படி அலுவலர்கள் தீவிர ஆய்வு செய்த பிறகே

புதுக்கோட்டை மாவட்டத்தில் அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை அரசு வகுத்துள்ள விதிமுறைகளின் படி அலுவலர்கள் தீவிர ஆய்வு செய்த பிறகே அனுமதி அளிக்க வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துதல் தொடர்பான  விதிமுறைகள் குறித்து அரசு அலுவலர்கள், மனைப்பிரிவு உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவர் மேலும் பேசியதாவது:
  தமிழக அரசு அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துதல் தொடர்பாக வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறையின் மூலம் விதிமுறைகள் வகுத்து அரசாணை வெளியிட்டுள்ளது.
இதன்படி 20.10.2016-ஆம் தேதி வரை வரன்முறைபடுத்தப்படாத மனைப்பிரிவுகள் இந்த விதிமுறைகளின் படி வரன்முறைப்படுத்தப்படும். முதல் கட்டமாக அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை வரன்முறை படுத்திட அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள ஊராட்சிகளுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சிகளுக்கு நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சிகளுக்கு பேரூராட்சி செயல் அலுவலர்களும் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காணப்படும் அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளைக் கண்டறிந்து அந்த மனைப்பிரிவு உரிமையாளர்களிடம் மனைப்பிரிவுகளுக்கு அங்கீகாரம் அளிக்க தேவையான ஆவணங்களை பெற வேண்டும்.
இதையடுத்து, வழிகாட்டு நெறிமுறைகளின் படி ஒவ்வொரு மனைப்பிரிவுக்கு பிரேம் ஒர்க் தயார் செய்து அனுமதி அளிக்க அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மனைகளை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம், பவர் பத்திரம் ஆகிய ஆவணங்கள் அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவுகளை வரன்முறை படுத்துவதற்குத் தகுதியான ஆவணமாகக் கருதப்பட மாட்டாது. மேலும் முழுமையாகவோ, பகுதியாகவோ அரசுக்கு சொந்தமான நீர்நிலைகள், குளங்கள், ஏரிகள், ஆறுகள் ஆகியவற்றை ஆக்கிரமித்துள்ள எந்த ஒரு அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள மாட்டாது.
மேலும், நமது மாவட்டத்தில் அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை அரசு வகுத்துள்ள விதிமுறைகளின் படி அலுவலர்கள் தீவிர ஆய்வு செய்து அனுமதி அளிக்க வேண்டும் என்றார்  ஆட்சியர்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராமசாமி, திட்ட இயக்குநர்  மு.சந்தோஷ்குமார் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) முருகண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com