புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒன்றியச்செயலர் வடிவேல் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஆலங்குடி நகர்ப் பகுதியில் உள்ள மதுக் கடைகளை அகற்ற வேண்டும், பேரூராட்சிப் பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும், ரேஷன் கடைகளில் தடையின்றி பொருள்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
முன்னாள் எம்எல்ஏ ராஜசேகரன், மாவட்டக் குழு உறுப்பினர் சிவகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.