புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி இறுதி வகுப்புகளில் இருந்து வெளியே செல்லும் மாணவர்களிடம் மாற்றுச்சான்றிதழ் கட்டணம், நன்கொடை என பல்வேறு வழிகளில் பள்ளி நிர்வாகங்கள் பணம் வசூலிப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் வழக்குரைஞர் சங்க முன்னாள் செயற்குழு உறுப்பினர் ஆசாத் புகார் மனு அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள மனு:
புதுக்கோட்டை, அறந்தாங்கி கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆலங்குடி, கறம்பக்குடி, திருமயம், கீரனூர், கந்தர்வகோட்டை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த அரசு தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் இறுதி ஆண்டை முடித்துச் செல்லும் மாணவ, மாணவிகளிடம் நன்கொடை என்ற பெயரிலும், மாற்றுச்சான்றிதழ் கட்டணம் என்ற பெயரில் மறைமுகமாக ரூ. 500 முதல் ரூ. 1000 வரையும், மாற்றுச்சான்றிதழுக்காக ரூ. 100 முதல் ரூ. 500 வரையும், ஆங்கிலவழிக் கல்வியில் சேர வரும் மாணவ, மாணவிகளுக்கு சேர்க்கை கட்டணமாக ரூ. 500 முதல் ரூ. 5 ஆயிரம் வரையும் வசூலிக்கப்படுகிறது.
இதனால் அரசுப் பள்ளிகளில் சேர வரும் மாணவ, மாணவிகள் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.
இந்தப் பிரச்னையில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும்.