புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே சாலையை சீரமைக்க வலியுறுத்தி, கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கறம்பக்குடியில் இருந்து திருமணஞ்சேரி வழியாக கருக்காகுறிச்சி வரை செல்லும் சுமார் 10 கிமீ சாலை கடந்த சில ஆண்டுகளாகவே மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. இந்த சாலை, போக்குவரத்துக்கு தகுதியற்றதாக இருப்பதால் இவ்வழியாக இயக்கப்படும் அரசுப் பேருந்து, சிற்றுந்துகள் முறையாக இயக்கப்படுவதில்லை.
இதனால், பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், இப்பகுதியில் உள்ள புகழ்பெற்ற திருமணஞ்சேரி சுகந்தபரிமளேஸ்வரர் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
இந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலர்களிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால், சாலையை உடனே சீரமைக்க வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் திருமணஞ்சேரி பிரிவு சாலையில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு சென்ற கறம்பக்குடி வட்டாட்சியர் சக்திவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம், கறம்பக்குடி போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மக்கள் மறியலை கைவிட்டு கலைந்துசென்றனர்.