அறந்தாங்கி நகரில் சாலையில் தவறவிட்ட ரூ.11 ஆயிரம் ரொக்கத்தை அறந்தாங்கி காவல் ஆய்வாளர் எம்.பாலமுருகன் முன்னிலையில் உரியவரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
அறந்தாங்கியில் மெர்சி தொண்டு நிறுவனம் நடத்திவருபவர் எஸ்.சையது இக்பால். இவர், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சாலையில் சென்றபோது, கீழே கிடந்த கவரில் ரூ.11ஆயிரம் இருந்ததை கண்டறிந்தார்.
இதையடுத்து, கவருடன் அந்தப் பணத்தை காவல் நிலையத்தில் சையது இக்பால் ஒப்படைத்தார். இதுகுறித்து பத்திரிகைகளில் வெளியான செய்தியைப் பார்த்த அறந்தாங்கி மின்வாரிய ஓய்வு பெற்ற ஊழியர் சக்திவேல், காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு அந்த பணம் தன்னுடையது என்பதை உறுதி செய்தார்.
இதையடுத்து, பணத்தை கண்டெடுத்த சையது இக்பாலையே, சக்திவேலுவிடம் அதனை வழங்கும்படி காவல் ஆய்வாளர் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியின்போது, தொண்டு நிறுவன தலைவர் அறந்தை அனிபா, காவல் உதவி ஆய்வாளர் க.குணசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.