கடின உழைப்பும், ஆசிரியரை மதித்தும் நடந்தால் உயர்நிலையை அடையலாம் என்றார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம். கோவிந்தராஜ்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், லெனாவிலக்கு செந்தூரான் பொறியியல் கல்லூரியில் கல்லூரித் தலைவர் ஆர். வயிரவன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐந்தாவது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்குப் பட்டம் வழங்கி மேலும் அவர் பேசியது:
வாழ்வில் மகிழ்ச்சியான பருவம் மாணவப்பருவம் மட்டுமே. இன்று பட்டம் பெற்றுள்ள மாணவர்கள் தன்னலம் பேணுவதோடு, இனிவரும் காலங்களில் மரங்களை வளர்த்து வனத்தைப் பாதுகாக்கவும் முன்வர வேண்டும். மாணவர்கள் கடின உழைப்பும், ஆசிரியர்களை மதித்து நடத்தலும் இருந்தால் சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைய முடியும் என்றார்.
இதையொட்டி, 224 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர். பல்கலைக்கழக தரவரிசையில் இடம்பிடித்த முதுநிலை தகவல் தொடர்பியல் துறை மாணவி பி. தீபலெட்சுமிக்கு பதக்கமும் பரிசும் வழங்கப்பட்டது.
முதன்மைச் செயல் அலுவலர் எஸ். கார்த்திக் வரவேற்றார்.முதல்வர் அ. நவீன்சேட் அறிக்கை வாசித்தார். நிர்வாக இயக்குநர் எம். பாண்டிகிருஷ்ணன் அறிமுகவு உரையாற்றினார்.சென்னை உயர் நீதிமன்ற வழக்ககுரைஞர் எம். பாஸ்கர் வாழ்த்தினார். துணைத் தலைவர் எஸ். நடராஜன் நன்றி கூறினார்.
மேலாண் இயக்குநர் எம். செல்வராஜ், மனிதவள இயக்குநர் ஆர். மீனாவயிரவன், தாளாளர் எம். ராமையா, செயலர் டி. தியாகராஜன், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.