புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே தோட்டத்தில் அனுமதியின்றி குவித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 300 யூனிட் மணல், மணல் அள்ளப் பயன்படுத்திய 7 வாகனங்களை சார் ஆட்சியர் திங்கள்கிழமை இரவு பறிமுதல் செய்தார்.
ஆலங்குடி அருகேயுள்ள செம்பட்டிவிடுதி, மழையூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள காட்டாற்றில் இருந்து அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்று விற்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து புதுக்கோட்டை சார் ஆட்சியர் கே.எம். சரயு திங்கள்கிழமை நள்ளிரவு செம்பட்டிவிடுதி, மழையூர், எம்.தெற்குதெரு பகுதியில் சோதனையில் ஈடுபட்டபோது, எம். தெற்குதெருப் பகுதியில் அதிமுக ஒன்றியச் செயலர் சரவணகுமாருக்குச் சொந்தமான தோட்டத்தில் சுமார் 300 யூனிட் மணல் அனுமதியின்றி குவித்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, மணல் குவியலைப் பறிமுதல் செய்ய கனிமவள அதிகாரிகளுக்கு சார் ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும், மணல் அள்ளப் பயன்படுத்திய 2 ஜே.சி.பி, 2 டிப்பர், 3 டிராக்டர் என 7 வாகனங்களை பறிமுதல் செய்து மழையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதுகுறித்து ஒன்றியச் செயலர் சரவணக்குமாரிடம் கனிமவள அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.