புதுக்கோட்டை மாவட்டம் முழுதும் காவல் துறையினர் மேற்கொண்ட அதிரடிச் சோதனைகளில் அனுமதியின்றி விற்பனைக்காக புகையிலைப்பொருள் வைத்திருந்த 26 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அனுமதியின்றி புகையிலைப் பொருள் விற்பதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ். செல்வராஜுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து காவல் நிலையத்துக்கும் உத்தரவிட்டார்.
இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி, மணமேல்குடி, மீமிசல், கோட்டைப்பட்டினம், கீரனூர், காரையூர் உள்பட பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி கடைகளில் விற்பனைக்காக புகையிலைப் பொருள் வைத்திருந்த 26 பேரைக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மூட்டைக்கணக்கில் புகையிலைப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.