புதுகை அருகே உள்ள மவுன்ட் சீயோன் சிபிஎஸ்இ பள்ளியில் உணவுத்திருவிழா அண்மையில் (நவ.13) நடைபெற்றது.
நிகழ்வுக்கு பள்ளித் தலைவர் ஜெயபாரதன் செல்லையா தலைமை வகித்தார். உணவுத் திருவிழாவை, திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் மாவட்ட உரிமையியல் நீதிபதி வி. பாலசுப்பிரமணியன் தொடங்கி வைத்துப் பேசியதாவது:
இந்த உணவுத் திருவிழா மாணவர்களை ஊக்குவிக்க உதவும். மேலும், வருங்காலத்தில் சிறந்த தொழில்முனைவோனாக மாறுவதற்கு ஒரு முன்னோட்டமாக அமைகிறது என்றார்.
பள்ளி இயக்குநர் ஜெ.ஜோனத்தன் பேசுகையில், ஆண்டுதோறும் இந்த உணவுத் திருவிழா பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.
இதன் மூலம் கிடைக்கும் வருவாய் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்குவதாகவும் குறிப்பிட்டார். பள்ளி மாணவ, மாணவிகள் விதவிதமான உணவுகளைத் தயாரித்து வந்து திருவிழாவில் காட்சிப்படுத்தியிருந்தனர்.
இதில் பங்கேற்ற மாணவர்கள் பெற்றோர், உறவினர்கள், பார்வையாளர்கள் தங்களுக்கான உணவை வாங்கி உண்டனர். பள்ளியின் உதவி இயக்குநர் ஏஞ்சலின் இறைவணக்கம் பாடினார். முதல்வர் ஜலாஜா குமாரி நன்றி கூறினார்.