புதுக்கோட் டை மாவட்டம், அன்னவாசல் அருகே வயலோகத்தில் மிகவும் சிறப்பு பெற்ற சிவன்கோயில் உள்ளது. மிகவும் பழைமைவாய்ந்த இக்கோயிலின் உள்புறம் மற்றும் கோயிலைச் சுற்றியுள்ள பகுதியில் முள்புதர் மண்டிக்கிடந்தது.
இதனால், கோயிலுக்குள் யாரும் செல்லமுடியாத நிலை இருந்தது. இதுகுறித்து தகவலறிந்த வரலாற்று ஆர்வலரும், கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுத் தலைவருமான கோமகன் தலைமையில், வீரசோழன் அணுக்கன் படையைச் சேர்ந்த சசிதரன் உள்ளிட்ட காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, திருச்சி, காரைக்குடி, தஞ்சாவூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் தன்னார்வலர்கள், வரலாற்று ஆர்வலர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் என 60-க்கும் மேற்பட்டோர் வயலோகம் வந்தனர்.
அவர்கள், இந்தக் கோயிலில் கடந்த செப். 29 ஆம் தேதி தொடங்கி, அக். 1 ஆம் தேதி வரை 3 நாள்கள் உழவாரப் பணியை மேற்கொண்டனர். இதையறிந்த புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத் தலைவர் ராஜேந்திரன், மணிகண்டன் உள்ளிட்டோர் வயலோகம் சென்று சிவன்கோயிலில் உள்ள கல்வெட்டு மற்றும் கோயில் குறித்த தகவல்களை தன்னார்வலர்களுக்கு விளக்கினர்.