கந்தர்வகோட்டையில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் குறித்த தெருமுனை பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது.
காந்திசிலை அருகில் நடைபெற்ற பிரசாரத்துக்கு அனைத்து தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் சிவராஜ் தலைமை வகித்தார். கார்பரேட் ஆதரவு, தேசவிரோத, மக்கள்விரோத, கொள்கைகளை பின்பற்றி வரும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தும் வரும் நவ. 9, 10, 11-களில் தில்லியில் நடைபெறும் நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்தை விளக்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தெருமுனை பிரசாரங்கள் நடைபெறுகின்றன.
அதன் தொடர்ச்சியாக கந்தர்வகோட்டை காந்தி சிலை, பேருந்து நிலையம், கல்லாக்கோட்டை, வேலாடிப்பட்டி, ஆதனக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், பெட்ரோலிய பொருட்களுக்கு தினசரி விலையேற்ற முறையைக் கைவிட வேண்டும், சமையல் எரிவாயு மானிய ரத்து கூடாது, பொதுத் துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குதல் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பிரசாரத்தில் விளக்கினர். அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.