புதுக்கோட்டையில் பல்வேறு துறை சார்ந்த முதன்மைப் பொறுப்பாளர்களுக்கு பேரிடர் மேலாண்மைப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் அ. ராமசாமி தொடக்கி வைத்துப் பேசியது: தொடங்கவுள்ள வடகிழக்கு பருவ மழை காலத்தில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் பல்வேறு துறை அலுவலர்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் பணியாற்ற ஒவ்வொரு துறையிலும் முதன்மை பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் சிறப்பு பயிற்சி அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்தப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது என்றார். சென்னை, ஸ்ரீசத்ய சாய் சேவா நிலையத்தை சார்ந்த மதுரை நாராயணசுவாமி என்பவரின் தலைமையிலான குழுவினர் பல்வேறு மீட்பு நடவடிக்கைகள் குறித்து செயல்முறை விளக்கப் பயிற்சி அளித்தனர்.
ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) க. பஞ்சவர்ணம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சுப. காளீஸ்வரன், மாவட்ட தீயணைப்பு, மீட்பு பணிகள்துறை அலுவலர் ஹக்கீம்பாட்சா, வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) சி. ஸ்டாலின், மாவட்ட தீயணைப்பு, மீட்பு பணிகள் துறை அலுவலர்கள், வருவாய்த் துறையினர் கலந்து கொண்டனர்.