புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் தமிழக அரசின் வேளாண் திட்டங்களை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ்.
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் வட்டாரத்தில் வேளாண் துறை சார்பில்
செயல்படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்த அவர் மேலும் பேசியது:
அரிமளம் வட்டாரம், மிரட்டுநிலை கிராமத்தில் தேசிய நீடித்த நிலையான வேளாண் இயக்கம் மூலம் ரூ. 25 ஆயிரம் மானியத்தில் அமைக்கப்பட்டிருந்த மண் புழு உரம் உற்பத்தி மையத்தை பார்வையிட்டு மண் புழு உர விற்பனை, பயன்பாடு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேல்நிலை வயல் கிராமத்தில் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் (நெல் குழுமம்) திட்டத்தின் கீழ் விவசாயி சரஸ்வதிக்கு ரூ. 75 ஆயிரம் மானியத்தில் வழங்கப்பட்ட பவர் டில்லர் கருவி ஆய்வு செய்யப்பட்டது.
தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் (நெல் குழுமம்) திட்டத்தின் கீழ் இயந்திர நடவை ஊக்கப்படுத்துதல் இனத்தில் மூர்த்தி வயலில் இயந்திரம் மூலம் நடவுப்பணிகள்,
ஏக்கருக்கு இயந்திரம் மூலம் நடவு செய்ய ஆகும் செலவுகள் குறித்து கேட்டறிந்ததுடன் ஹெக்டருக்கு அரசு மானியமாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படுவது போன்ற பல்வேறு அரசின் திட்டங்களை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் ஆட்சியர்.
முன்னதாக, ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை சார்பில் மேல்நிலைவயல் ஊராட்சி, மேல்நிலைப்பட்டி முதல் நெடுங்குடி வரை சாலையின் இருபுறங்களிலும் வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 6.90 லட்சத்தில் மரக்கன்று நடும் பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வேளாண் உதவி இயக்குநர் கா. காளிமுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன், வேளாண் அலுவலர் ஆ. மகேஸ்வரி, துணை வேளாண் அலுவலர் பா. ரமேஷ், உதவி வேளாண் அலுவலர்கள் பெரியசாமி, வெங்கடேசன், எம். ராம்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.