அறந்தாங்கி அருகே வல்லவாரியில் பயிர்க் காப்பீட்டு நிவாரணத் தொகை வழங்கக் கோரி விவசாயிகள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அறந்தாங்கி தாலுகா பூவற்றகுடி பிர்காவுக்குட்பட்ட ஆயிங்குடி, வல்லவாரி, மாத்தூர் ராமசாமிபுரம், வடவளம், பெரியாலூர், நெய்வத்தளி, மாங்குடி, அரசர்குளம் , கொடிவயல் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டு நிவாரண தொகை வழங்க கோரி வல்லவாரி கடைவீதியில் நடைபெற்ற போராட்டத்துக்கு ஆலங்குடி எம்எல்ஏ சிவ.வீ.மெய்யநாதன் தலைமை வகித்தார்.
ஆயிங்குடி முன்னாள் ஊராட்சித் தலைவர் சண்முகநாதன், மாங்குடி முன்னாள் ஊராட்சி தலைவர் ராணி சுப்பையா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இவர்களுடன் அறந்தாங்கி காவல் ஆய்வாளர் கே. பாலமுருகன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அறந்தாங்கி வட்டாட்சியர் சி. பரணி, அறந்தாங்கி வேளாண் உதவி இயக்குநர் சக்திவேல் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் ஆயிங்குடியை தவிர மற்ற ஊர்களுக்கு பயிர் காப்பீட்டு நிவாரணத் தொகை வந்து விட்டதாகவும் ஆயிங்குடி கிராமத்துக்கும் உடனடியாக வழங்கப்படும் என உறுதியளித்ததன்பேரில் போராட்டம் தாற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது. மறியலால் அறந்தாங்கி- பேராவூரணி சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து ஆயிங்குடி முன்னாள் ஊராட்சித் தலைவர் சண்முகநாதன் கூறுகையில் அதிகாரிகள் கூறியபடி ஒரு வாரத்திற்குள் நிவாரணத்தொகை வழங்காவிட்டால் ஆயிங்குடி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிக்கு விவசாயிகள் பூட்டு போட்டு மறியல் போராட்டம் நடத்துவர் என்றார்.