மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் சிறப்பிடம் பெற்ற புதுக்கோட்டை வைரம் மேனிலைப்பள்ளி மாணவர்களுக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
கோவை நேரு கல்வி நிறுவனங்களின் வளாகத்தில் மாநில அளவில், பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது. அதில் வைரம் மாணவ மாணவிகள் 46 பேர் கலந்து கொண்டனர். இதில் கார்பன்டை ஆக்ஸைடு வாயுவை எரிபொருளாக மாற்றும் சோதனை, மழை அளவை மிகத் துல்லியமாக கணக்கிட்டு, மழைஅளவை பயன்படுத்தி விவசாயம் செய்யும் முறை ஆகியவை சிறந்த படைப்பாக தேர்வு செய்யப்பட்டு பரிசுகளை வென்றனர்.
இதையடுத்து, பள்ளி நிர்வாகம் சார்பில் புதன்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு பள்ளியின் தாளாளர் கே.ரகுபதி சுப்பிரமணியன், தலைமை வகித்தார். பள்ளியின் முதல்வர் ஜி. ரேவதி முன்னிலை வகித்தார். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள். மரிய சாந்தி, உஷாராணி,அமலதாஸ், வேணி ஸ்ரீ ஆகியோர் செய்திருந்தனர்.