புதுக்கோட்டை கைக்குறிச்சி வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இருநாள் (அக்.11, 12) திறன் வளர்ப்புப் போட்டிகள் புதன்கிழமை தொடங்கியது.
கல்லூரி வளாகத்தில் கல்லூரித்தலைவர் கவிஞர் கதிரேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ச.செந்தில்வேல்முருகன் பங்கேற்று போட்டிகளைத் தொடக்கி வைத்தார்.
பல்வேறு போட்டிகளில் 400 -க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஒப்பித்தல் போட்டி (தமிழ்,ஆங்கிலம்)-களில் வெற்றி பெறுவோருக்கும், அறிவியல் மாதிரி செயல் திட்ட போட்டி, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
கல்வியியல் கல்லூரி தாளாளர் பா.கருப்பையா முன்னிலை வகித்தார். முதல்வர் கலியபெருமாள் வரவேற்றார். இப்போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு வசதியாக பல்வேறு பகுதிகளில் இருந்தும் கல்லூரியின் வழித்தடங்களில் கல்லூரி நிர்வாகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டன.