அறந்தாங்கியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர்
வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்சியின் சமூக ஊடக பிரிவின் மாநில தலைவர் எஸ்.டி.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் விவசாய அணி மாநில துணைத் தலைவர் சு.செல்வரெத்தினம், புதுக்கோட்டை தெற்கு மாவட்டத் தலைவர் தர்ம.தங்கவேல் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
அறந்தாங்கி பகுதியில் விவசாயிகளின் பயிர் காப்பீடு தொகையை முழுமையாக உடனே வழங்க கோரியும், அறந்தாங்கி தொகுதியில் நடைபெற்று வரும் மணல் கொள்ளையை தடுக்க கோரியும், மணமேல்குடி, மீமிசல் பகுதியில் இயங்கி வரும் பத்திரப்பதிவு அலுவலகங்களை தொடர்ந்து இயங்கிட வலியுறுத்தியும், நகரில் பழுதடைந்த சாலைகளை செப்பனிடகோரியும், டெங்கு காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனையில் முழு சிகிச்சை அளிக்ககோரியும், புதிய பேருந்து நிலையம் அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில துணைத் தலைவர் அரிமளம் சுந்தர்ராஜன், மாநில செய்திப்பிரிவு தலைவர் பெனட் அந்தோனிராஜ், புதுக்கோட்டை முன்னாள் நகர் மன்ற தலைவர் துரை.திவ்யநாதன், வடக்கு மாவட்ட தலைவர் முருகேசன், மாவட்ட விவசாயப் பிரிவு செயலாளர் மகாலிங்கம், அறந்தாங்கி நகரத் தலைவர் கே.வீராச்சாமி, வட்டாரத் தலைவர்கள் அறந்தாங்கி முருகன், மணமேல்குடி சரவணன், ஆவுடையார்கோவில் கூடலூர் முத்து, வடக்கு விஸ்வநாதன், மாவட்ட துணைத்தலைவர் என்.ஜி.என்.மோகன், மாவட்ட செயலாளர் கே.யோகேஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.