கந்தர்வகோட்டை அருகே மாட்டை விரட்டிச் சென்றபோது மரத்தின் வேர் தடுக்கி கீழேவிழுந்து காயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இறந்தார்.
கந்தர்வகோட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த குளத்தூர்நாயக்கர்பட்டி அருகில் உள்ள கோவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் தமிழழகன் (23). இவர் கடந்த 18 ஆம் தேதி வீட்டிலிருந்த மாட்டினை அருகிலிருந்த கொட்டகையில் கட்டுவதற்கு பிடித்துச் சென்றபோது, மாடு வெறித்து ஒடவே அதனை துரத்திசென்றுள்ளார்.
அப்போது அந்த பகுதியிலிருந்த மரத்தின் வேரில் கால் சிக்கி நிலைதடுமாறி கிழேவிழுந்ததில் தமிழழகனுக்கு தலையின் பின்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
அருகிலிருந்தவர்கள் அவரை தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இரவு இறந்தார். இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்துவருகின்றனர்.