கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதுகை மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை காத்திருக்கும் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர்(அரசு ஆசிரியர்கள் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு) பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, செப். 7 முதல் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆறாம் நாளான வியாழக்கிழமை புதுகை மாவட்ட ஆட்சியரகத்தில் அரசின் அறிவிப்புக்காகக் காத்திருக்கும் போராட்டத்தை 2 ஆம் நாளாகத் தொடர்ந்தனர். போராட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கே.நாகராஜன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் க.கருப்பையா ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், பல்வேறு அரசு ஆசிரியர்கள் சங்கங்கள், அரசு ஊழியர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். இதையொட்டி போராட்ட களத்தில் சமைக்கப்பட்ட உணவு, பங்கேற்ற அனைவருக்கும் வழங்கப்பட்டது. இரவில் போராட்டத்தைத் தொடரப்போவதாக கூட்டமைப்பைச் சேர்ந்த பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் தெரிவித்தனர். நாளை முதல் கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிகிறது.
11 பெண்கள் உள்பட 43 பேர் கைது
போராட்டக்களத்தில், இரவில் தங்கியிருந்து காத்திருக்கும் போராட்டத்தைத் தொடர்ந்த ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பைச் சேர்ந்த 11 பெண்கள் உள்பட 43 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.