நல்ல புத்தகங்களை படித்து மாணவர்கள் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார் பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் சி.திருச்செல்வம்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே பெருநாவலூரில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
மாணவ, மாணவியருக்கு பட்டங்கள் வழங்கிய பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் சி.திருச்செல்வம் பேசியது:
இந்தியாவில் மட்டுமே குடும்ப உறவுகள் சிறப்பாக இருக்கின்றன. அதுவும் நகர்ப் பகுதிகளை விட கிராமங்களில் உறவு முறைகள் அருகருகே வசிப்பதால் அவர்களிடம் பாசம், மகிழ்ச்சி அதிகளவில் ஏற்படுகிறது.
நமக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். ரயில், பேருந்து பயணங்களின் போது புத்தகம் வாசித்தால் பயணக் களைப்பும் ஏற்படாததோடு, அறிவு, மனதை மேன்மைபடுத்திக் கொள்ள முடியும் என்றார்.
விழாவிற்கு கல்லூரி முதல்வர் எம்.வீரப்பன் தலைமை வகித்தார். அனைத்துத் துறை பேராசிரியர்கள், மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.
இளங்கலையில் 229 மாணவ, மாணவியருக்கும், முதுகலையில் தேர்ச்சி பெற்ற 47 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.