விராலிமலை சோதனைச்சாவடியில் குடிநீர் கோரி காலிக்குடங்களுடன் புதன்கிழமை பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விராலிமலை அருகேயுள்ள வாணதிராயன்பட்டியில் 100 க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவைக்காக ஆழ்துளை கிணறு மூலம் ஒரு மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி மற்றும் ஒரு மினி டேங்க் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சரிவர குடிநீர் வராததால் இப்பகுதி பொதுமக்கள் மிகவும் அவதிபட்டு வந்தனர். இதுகுறித்து விராலிமலை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை கோரிக்கை அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் கடந்த புதன்கிழமை காலிக்குடங்களுடன் விராலிமலை சோதனைச்சாவடி அருகே திருச்சி செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து விராலிமலை போலீஸார் மற்றும் ஊராட்சி மன்ற அதிகாரிகள் நிகழ்விடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.