புதுக்கோட்டை அருகே சமயபுரம் கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற தாய், மகள் உள்பட 3 பேர் சனிக்கிழமை மாலை கார் மோதி உயிரிழந்தனர்.
திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு ஆடி மாதத்தையொட்டி ஏராளமான மக்கள் பாதயாத்திரை செல்கின்றனர். இந்நிலையில், சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் இருந்து சமயபுரம் புறப்பட்ட பாத யாத்திரை குழுவினர் சனிக்கிழமை மாலை புதுகை மாவட்டம், நார்த்தாமலை அருகே திருச்சி-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, பின்னே அதிவேகமாக வந்த சென்ற கார் அவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் சிங்கம்புணரியைச் சேர்ந்த யோகேஸ்வரன் மனைவி மணிமேகலை (35), அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சேவுகமூர்த்தி (17) ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த மணிமேகலையின் மகள் தர்ஷிகா (6) புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார்.
இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காரை பின்தொடர்ந்து சென்ற அப்பகுதி மக்கள் விசலூர் அருகே வாகனத்தை மடக்கி காரின் ஓட்டுநரான திருவாரூரைச் சேர்ந்த வடிவேலுவை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். கீரனூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.