தமிழக அரசு ஆங்கில மருத்துவத்துக்கு அளிப்பது போல , நமது பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கும் முக்கியத்துவம் அளித்துவருகிறது என்றார் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர்.
புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவர் மேலும் கூறியது:
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கர்ப்பிணிகளுக்கு சுகப் பிரசவம் நடைபெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பொதுவாக மகப்பேறு கால இறப்பு சதவீதத்தை அரசு குறைத்துள்ளது.
ஆனால் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் உயர் ரத்த அழுத்தம்தான் சவாலாக உள்ளது. அதை முழுமையாகக் கட்டுப்படுத்த புதிய முயற்சியை தமிழக அரசு எடுத்துள்ளது.
அதன்படி ஆக.15 முதல் 2019-ஜன.26-வரை சர்க்கரையில் அக்கறை' என்ற திட்டத்தை சுகாதாரத் துறை செயல்படுத்த உள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் கர்ப்ப காலத்தில் ரத்த அழுத்தம் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என்பதை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இதன் மூலம் மகப்பேறு இறப்பைக் குறைக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
மகப்பேறு இறப்பைப் பொறுத்தவரை கடந்தாண்டு ஒரு லட்சம் பிரசவத்தில் இறப்பு என்பது 66 ஆக இருந்தது.
அதை இந்த ஆண்டு 62 ஆகக் குறைத்துள்ளோம். மேலும் குறைப்பதற்காகத் தான் சக்கரையில் அக்கறை திட்டத்தைக் கொண்டுவர உள்ளோம். கேரளத்தில் தற்போது வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மீட்பு, சுகாதார பணிகள் மேற்கொள்ள தமிழக சுகாதாரத் துறை தயாராக உள்ளது என்றார் அமைச்சர்.