பொன்னமராவதியில் ரத்த தான விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
பொன். புதுப்பட்டி ரோட்டரி சங்கம், பொன்னமராவதி துர்க்கா நர்சிங் கல்லூரி மற்றும் மக்கள் பாதை இணைந்து நடத்திய பேரணிக்கு ரோட்டரி தலைவர் அ. வெள்ளைச்சாமி தலைமை வகித்தார். காவல் ஆய்வாளர் கருணாகரன் பேரணியை தொடங்கிவைத்தார். சேங்கை ஊரணி அருகே தொடங்கிய பேரணி முக்கிய வீதிகளின் வழியே சென்று காவல் நிலையம் அருகே நிறைவுற்றது. பேரணியில் மனிதநேய வெளிப்பாட்டின் மிகச்சிறந்த அடையாளம் ரத்த தானம். ஒருமுறை செய்யும் ரத்த தானத்தின் மூலம் நான்கு உயிர்கள் காக்கப்படுகின்றன. ரத்ததானம் வழங்குவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பன உள்ளிட்ட கருத்துக்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி துண்டுப்பிரசுரம் வழங்கிச் சென்றனர். ரோட்டரி சங்க நிர்வாகிகள் க. ஆறுமுகம், செல்வராஜ், சிஎஸ். முருகேசன், சி. முரளிதரன், பிபிசி. ராஜா, சரவணன், மக்கள் பாதை ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் அறிவானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.