புதுக்கோட்டை அருகேயுள்ள நமணசமுத்திரம் பெரியகண்மாய் வரத்துவாரி ஆகிகரமிப்பை அகற்றக்கோரி, இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருமயம் வட்டம் நமணசமுத்திரம் பகுதியில் உள்ள பெரியகண்மாய் வரத்துவாரி தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாம். ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை ஏதும் இல்லையாம்.
இதைத்தொடர்ந்து, ஆக்கிரமிப்பை பொக்லைன் இயந்திரம் கொண்டு அகற்றப்போவதாக இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் அறிவித்ததோடு, வியாழக்கிழமை ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற திருமயம் வட்டாட்சியர் ரமேஷ், பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் கமலேஸ்வரி, திருமயம் போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ஆக்கிரமிப்பை உடனே அகற்றுவதாக உறுதியளித்தைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.