புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் புதன்கிழமை வரை 19 நாள்களில் 14, 678 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 9.64 லட்சம் பேருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கஜா புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய கடலோர மாவட்டங்களில் நோய்த் தொற்று ஏற்படாமல் தடுத்திட மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
உள்ளாட்சித் துறையுடன் இணைந்து அனைத்து குடிநீர்த் தொட்டிகளும் சுத்தப்படுத்தப்பட்டு குளோரின் கலந்து பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டது. அரசுப் பள்ளிகளில் நீண்ட விடுப்பில் இருக்கும் மாணவர்களைக் கண்டறிந்து அவர்களின் வீடுகளுக்கே சென்று மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் புதன்கிழமை வரை 19 நாட்கள் 14, 678 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. இவற்றில் மொத்தம் 9,64,255 பேருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தேவைப்படுவோருக்கு மருந்துகளும் மருத்துவ ஆலோசனையும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 47,95,922 பேருக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த மாவட்டங்களில் மருத்துவ முகாம்கள் நடத்திடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புயலால் பாதிக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சீரமைக்கப்பட்டு அவற்றில் இயல்பான வெளிநோயாளிகள் சிகிச்சை மற்றும் மகப்பேறு சிகிச்சைகள் நடைபெற்று வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.