புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கஜா புயலின் கோரத் தாண்டவத்தில் சேதமடைந்த ஆலங்குடி பகுதியில் மின் ஊழியர்களின் கடும் உழைப்பால் பல பகுதிகளுக்கு மின்இணைப்பு வழங்கப்பட்டாலும், பெரும்பாலான கிராமங்களுக்கு இன்னும் மின் இணைப்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில், ஆலங்குடி அருகேயுள்ள பள்ளத்திவிடுதி ரேஷன் கடையில் வெள்ளிக்கிழமை அப்பகுதி மக்கள் பலருக்கு மண்ணெண்ணெய் வழங்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் பள்ளத்திவிடுதி பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சென்ற ஆலங்குடி போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதில் அவர்கள் கலைந்து சென்றனர். மறியலால் ஆலங்குடி-கொத்தமங்கலம் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்ட்டது.