புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே தோப்புவயல் கிராமத்தில் டாஸ்மாக் ஊழியரைத் தாக்கி ரூ. 18 லட்சம் ரொக்கத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
தோப்புவயல் கிராமத்தில் தனியார் இடத்தில் அரசு மதுபானக் கடை
(டாஸ்மாக்) இயங்கி வருகிறது. இந்நிலையில், சனிக்கிழமை இரவு வழக்கம்போல், கடையைப் பூட்டிவிட்டு ரூ. 18 லட்சத்தை விற்பனையாளர்கள் கண்ணன் மற்றும் உதவியாளர்கள் செந்தில், காளிதாஸ் ஆகியோர் இருசக்கர மோட்டார் வாகனத்தில் கொண்டுவந்து கொண்டிருந்தனர்.
அப்போது, கடையில் இருந்து 100 மீ., இடைவெளியில் செல்லும்போது, மர்ம நபர்கள் வேறொரு இருசக்கர வாகனத்தில் வந்து மோதி விபத்தை ஏற்படுத்தி உள்ளனர்.
இதில், நிலைத்தடுமாறி விழுந்த கண்ணன் பணப் பையை தூக்கிக் கொண்டு ஓடியுள்ளார். அவரைப் பின் தொடர்ந்து ஆயுதங்களுடன் துரத்திச்சென்ற மர்ம நபர்கள் கண்ணனின் காலில் கத்தியால் தாக்கிவிட்டு அவரிடம் இருந்த பணப்பையைத் திருடிச் கொண்டு தப்பிச் சென்றனர். இதைத்தொடர்ந்து, கண்ணன் அறந்தாங்கி அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மணமேல்குடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.