புதுக்கோட்டை மாவட்டம் திருப்பெருந்துறை எனும் ஆவுடையார்கோவிலில் திங்கள்கிழமை மாலை கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான திருப்பெருந்துறை எனும் ஆவுடையார்கோவில் அருள்தரு சிவயோக நாயகி உடனாய அருள்மிகு ஆத்மநாத சுவாமி திருக்கோயிலில் கார்த்திகை மாதம் முழுவதும் திங்கள்கிழமைகளில் சோமவார விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
கடைசி சோமவாரத்தை முன்னிட்டு திங்கள்கிழமை அதிகாலை முதல் ஆத்மநாத சுவாமியையும், அருள்மிகு மாணிக்கவாசகர், அம்பாளையும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தார்கள். மாலையில் மாணிக்கவாசகர் சந்நிதியில் 108 சங்காபிஷேகம் சிவாச்சாரியார்களால் நடத்தப்பட்டது.
பொன்னமராவதி: ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரர் கோயிலில் கார்த்திகை சோமவாரத்தையொட்டி 108 சங்காபிஷேக விழா நடைபெற்றது.
கார்த்திகை சோமவாரத்தையொட்டி ஒவ்வொரு திங்களன்றும் கோயில்களில் சங்காபிஷேகம் நடைபெறும். அதன்படி பொன்னமராவதி சோழீஸ்வரர் கோயிலில் சரவண குருக்கள் தலைமையில் 108 சங்குகள் வைத்து சிறப்பு யாகபூஜைகள் செய்து சங்காபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரருக்கு பால், பன்னீர், திரவியங்கள் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். இதேபோல், வேந்தன்பட்டி நெய்நந்தீஸ்வரர் கோயில், பொன்னமராவதி பாலமுருகன் கோயிலில் சங்காபிஷேகவிழா நடைபெற்றது.