புதுக்கோ ட்டை மாவட்ட நேரு யுவ கேந்திரா, மீனம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், இளையோர் நாடாளுமன்றம், கஜா புயல் நிவாரணப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டு விழா, தேசிய மாநாட்டில் கலந்து கொள்ளும் இளம் மாணவ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு ஆகிய முப்பெரும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
நேரு யுவ கேந்திராவின் மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் சுந்தரமகாலிங்கம் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயலெட்சுமி, நேரு யுவ கேந்திரா கணக்காளர் நமச்சிவாயம், பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் ஜோதி பொன்னுச்சாமி, கிராம கல்விக்குழுத் தலைவர் சிந்தாமணி மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ரெங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட மாதிரி நாடாளுமன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவர்கள் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என 2 அணிகளாகப் பிரிந்து பேரவைத்தலைவர், அவை முன்னவர் முன்னிலையில் நாட்டின் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதித்தனர். குறிப்பாக கஜா புயல் தாக்குதல் குறித்தும், அதன் தொடர்ச்சியாக அரசு செய்த மீட்பு நடவடிக்கைகள் குறித்தும், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதம் நடத்தினர். நேரு யுவகேந்திராவின் தேசிய இளையோர் தொண்டர் சுந்தரம்பாள் நன்றி கூறினார்.