புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 292 மனுக்கள் பெறப்பட்டன. அவைகளின் மீது உரிய நடவடிக்கை எடுத்து அதுகுறித்த விவரங்களை மனுதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில், முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து இருவருக்கு தலா ரூ. ஒரு லட்சத்துக்கான காசோலைகளை ஆட்சியர் வழங்கினார்.மேலும், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் அகதிகள் முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணையை பயனாளியிடம் ஆட்சியர் வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அ. ராமசாமி, மாவட்ட சமூக நல அலுவலர் ரேணுகா, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் முகமது ஜாஹிர் உசேன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.